ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
Pregnant woman sexually assaulted and pushed off moving train
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர். 4 மாத கர்ப்பிணியான அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக நேற்று கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது இளம் பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என தெரிகிறது. அப்போது இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் வேறொரு பொது பெட்டிக்கு சென்று தப்பி சென்றனர்.
அதன் பின்னர் தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது. மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் ரெயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Pregnant woman sexually assaulted and pushed off moving train