தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 32 பேர் கைது.!
srilangan navy arrest 32 tamilnadu fishermans
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 32 பேரையும் தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
srilangan navy arrest 32 tamilnadu fishermans