ஏன்? மர்ம நபர்களால் பிரபல ரவுடியை நள்ளிரவில் கொலை செய்ய காரணம் என்ன?
the murder of famous rowdy middle night by mysterious people
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான வீ.கே.குருசாமி. அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்குமிடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

காளீஸ்வரன் :
இந்தநிலையில் பிரபல ரவுடியும், வீ.கே.குருசாமியின் ஆதரவாளருமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான காளீஸ்வரன். இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியிலுள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய காவலர்கள் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.
வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் வீ.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்தத் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
English Summary
the murder of famous rowdy middle night by mysterious people