தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி - திருமாவளவன் வாழ்த்து.!
thirumavalavan wishes to ntk party for Election Commission recognized
தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8% வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளைப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு கட்சிகளும் வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய்க்கும், மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசனுக்கும் கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்துவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thirumavalavan wishes to ntk party for Election Commission recognized