மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.டி.எஃப் வாசன்; வங்கிக் கணக்கு முடக்கம்; திருப்பதி போலீசார் அதிரடி ..!
TTF Vasans bank account frozen
பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக, அவர் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு அதனை யூடியூபில் பதிவிடுவதன் மூலமாக தனக்கென பெரிய ரசிகர் வட்டத்தை இவர் கொண்டுள்ளார். அத்துடன், பல்வேறு சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகளிலும் இவர் அடிக்கடி மாட்டிக் கொள்வார். அதில் குறிப்பாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்கள் பதிவிடுவது போன்ற காரணங்களுக்காக இவர் மீது அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கில் டி.டி.எஃப் வாசன் சிறை தண்டனையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப் வாசன் சென்றிருந்த போது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.டி.எஃப் வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் மூலம் டி.டி.எஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
English Summary
TTF Vasans bank account frozen