'ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்..? 30 வருடங்களுக்கு பின் விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த்..!
Why did you speak out against Jayalalithaa Rajinikanth has explained
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று. இதனை முன்னிட்டு, 'ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்' என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவண படத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில்,

'பாட்ஷா விழாவில், ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பாளராக மேடையில் இருந்தார். வெடி குண்டு கலாசாரத்தை பற்றி நான் பேசினேன். அமைச்சரை வைத்துக்கொண்டே அதை பற்றி பேசி இருக்கக்கூடாது. ஆனால், பேசி விட்டேன். அப்போது எனக்கு அந்தளவுக்கு தெளிவு இல்லை. அப்போது அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டார். அது தெரிந்ததும் நான் ஆடிபோய் விட்டேன். என்னால் தானே இப்படி ஆகிபோனது என்று எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
காலையில் போன் பண்ணி மன்னிப்பு கேட்டேன், ஆனால், அவர் எதுவுமே நடக்காதது போல், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள், பதவிதானே போனது, நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று சர்வசாதாரணமாக சொன்னார். ஆனால், அது தழும்பு போல என்னைவிட்டு போகவில்லை, போகாது.

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Why did you speak out against Jayalalithaa Rajinikanth has explained