ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகள் தேவையில்லை..சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
ATMs dont need 24-hour security guards. Supreme Court verdict!
வங்கி ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து இந்த மோசடி விவகாரம் பத்திரிகையில் வெளியானது.அப்போது அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில்24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது ஐகோர்ட்டு.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. இதையடுத்து அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன என்றும் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்றும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன" என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். அதன் பின்னர் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.
English Summary
ATMs dont need 24-hour security guards. Supreme Court verdict!