சமூகவலைத்தளத்தில் 'ஜிப்லி' படத்தை பகிர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியிடமாற்றம்: தெலுங்கானா அரசு அதிரடி..!
IAS officer shared the film Ghibli on social media transferred Telangana government takes action
சமூக வலைதளத்தில் ஜிப்லி படத்தை பகிர்ந்ததை தொடர்ந்து பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால். இளைஞர் முன்னேற்றம், சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை சிறப்பு தலைமை செயலாளராக பதவி வகித்தவர்.
இவர் சமீபத்தில், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அருகே, நிலம் கையகப்படுத்துவதற்காக மரங்களை வெட்டிய விவகாரம் தொடர்பான படத்தை ஜிப்லி படமாக மாற்றி, தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது, அரசின் செயல்பாட்டை கேலி செய்யும் வகையில் இருப்பதாக, ஆளும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து அவரை போலீசார் விசாரணை செய்ததில் ஸ்மிதா சபர்வால் வாக்குமூலம் அளித்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ''என் பதிவை 02 ஆயிரம் பேர் மறு பகிர்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? நான் மட்டும் குறி வைத்து தாக்கப்படுகிறேனா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நடவடிக்கை கேள்விக்கு உள்ளாக்குகிறது,'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரை பணியிடம் மாற்றம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, மாநில நிதி ஆணையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில வாரங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்மிதா முன்னின்று செய்து வந்த நிலையில், அவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 20 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஸ்மிதா சபர்வால் காங்கிரஸ் ஆட்சியால் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக, நெட்டிசன்கள் புகார் கிளப்பி வருகின்றனர். முந்தைய பி.ஆர்.எஸ்., கட்சி ஆட்சியில் ஸ்மிதா சபர்வால் மிகவும் செல்வாக்கான அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IAS officer shared the film Ghibli on social media transferred Telangana government takes action