நீதிபதி வீட்டில் சிக்கிய பணம் - விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழு அமைப்பு.!
justice committe creat for investigation of money seized from delhi high court justice case
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என்றுத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் ஐந்து நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் உள்ளிட்டோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
English Summary
justice committe creat for investigation of money seized from delhi high court justice case