பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: 35 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல்முறை! மொத்தமாய் முடங்கிய காஷ்மீர்!
Kashmir fully shutdown
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக, பயங்கரவாத தாக்குதலை கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. வணிக, சமூக அமைப்புகள், மத மற்றும் அரசியல் கட்சிகள் இதில் முழுமையாக கலந்துகொண்டன.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து மந்தமாக இருந்தது; தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. சில இடங்களில் அமைதிப் பேரணிகளும் நடைபெற்றன.
ஜம்முவிலும் ஒரேநாள் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. ஜம்மு நகரம், உதம்பூர், சம்பா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாகிஸ்தானை கண்டித்து கோஷமிட்டனர். தேசிய மாநாட்டுக் கட்சி பேரணி நடத்த, எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் மகன்களும் பங்கேற்றனர். ‘வன்முறைக்கு இடமில்லை’, ‘அப்பாவிகளை கொலை செய்யாதீர்’ என்ற வாசகங்கள் அங்கு பரப்பப்பட்டன.
முதல்வரின் ஆலோசகரும் எம்எல்ஏவுமான நசீர் ஒமர் வானி, “முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து வாழ விரும்புகிறோம். பயணிகள் எங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம்” என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, இது காஷ்மீர் மக்களுக்கே எதிரான தாக்குதல் என்றும், நாட்டைச் சேர்ந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். இது சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல, காஷ்மீரையே குறிவைக்கும் பயங்கரவாத நடவடிக்கை என அவர் கண்டனம் தெரிவித்தார்.