திருமண நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி!
Kerala High Court ban marriage Plate Water Bottle
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான வழக்குகளில் கேரள உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கூறுகையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தலாம். மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும் என்று கூறியுள்ளது.
ரயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ரயில் தண்டவாளங்களில் இருந்து கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், கேரளாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பிளாஸ்டிக் தடை பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
Kerala High Court ban marriage Plate Water Bottle