குகைக்குள்ள 'டிரெக்கிங்' செய்ய ரெடியா'..? ஒடிசாவில் புதிய குகை 'டிரெக்கிங்' திட்டம் அறிமுகம்..!
Odisha launches new cave trekking project
30,000 ஆண்டுகள் பழமையான குகைகளுக்கு டிரெக்கிங் செல்லும் வசதியை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் மஹாநதியின் கரையோரம் 350 சதுர கிலோ மீட்டர் ப ரப்பில் டெப்ரிகர் சரணாலயம் உள்ளது. அதன் அருகே ஹிராகுடா அணையும் அமைந்துள்ளது. இவற்றை ஹிராகுடா வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இங்கிருந்து இரண்டு மணி நேரம் பயண தூரத்தில், பழங்கால குகைகள் உள்ள பீமா மண்டலி பகுதி உள்ளது. இந்த குகையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், இது, 30,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதிப்படுத்தினர்.

அத்துடன், இந்த குகைகளில் மான், யானை ஆகிய விலங்குகளின் சிற்பங்கள், பல்வேறு விலங்குகளின் கால் தடங்கள், தேன்கூடு வடிவங்கள் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணியர் சிரமமின்றி பார்வையிட மாநில அரசு திட்டமிப்பட்டு, புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த சுற்றுலா, டெப்ரிகர் சரணாலயத்தில் தொடங்கி பீமா மண்டலி குகைகள் வரையிலான ஒரு நாள் பயண திட்டமாகும். இதில் ஹிராகுடா அணை, சமலேஸ்வரி கோவில், சம்பல்பூர் உயிரியல் பூங்கா ஆகியவற்றை காணலாம் என்று கூறப்படுகிறது. இதில் இயற்கையை ரசித்தவாறே 1 கி.மீ., குகைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் டிரெக்கிங் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெப்ரிகருக்கு 70,000 சுற்றுலா பயணியர் சென்றுள்ளனர். அவர்களில் 40,000 பேர் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் சிலர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய சுற்றுலா திட்டத்தால் பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அம்மாநில அரசு கூறுகிறது.
English Summary
Odisha launches new cave trekking project