''பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட கூடாது''; உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
People with visual impairments should not be denied opportunities Supreme Court orders
மாவட்ட நீதித்துறையில் பணியாற்றுவதற்கு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாவட்ட நீதித்துறையில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து, பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவரின் தாய் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மத்திய பிரதேசம் நீதி சேவை விதிகளின்படி, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மாவட்ட நீதித் துறையில் வேலை வாய்ப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டது.

ஆனால், இதை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது. இந்நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களிலும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

''இதை முக்கிய பிரச்னையாக கருதி விசாரித்தோம். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பின் தேவை ஆகியவற்றை கருத்தில் வைத்து ஆய்வு செய்தோம். மாற்றுத்திறனாளி என்பதால் யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது.
அவர்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது. மாவட்ட நீதித்துறையில் பணியாற்ற, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் உரிய வாய்ப்பு தர வேண்டும். சம வாய்ப்பு வழங்க மறுக்கும் மத்திய பிரதேச நீதித்துறை விதிகள் ரத்து செய்யப்படுகின்றன.'' என நீதிபதிகள் அமர்வில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கு தொடர்ந்தோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, அமர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
People with visual impairments should not be denied opportunities Supreme Court orders