புலனாய்வு அதிகாரிகள் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக ரன்யா ராவ் புகார்..!
Ranya Rao complains that the investigation officers physically attacked her
கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் உடல் ரீதியாக தான் தாக்கப்பட்டதாக பரப்பு கடித்தை டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு எழுதியுள்ளார்.
விசாரணையின் போது புலனாய்வு அதிகாரிகள் தன்னை கன்னத்தில் பல முறை அறைந்ததாகவும், உணவு வழங்க மறுத்ததாகவும், தூங்கவிடாமல் தடுத்ததாகவும், வெள்ளை காகிதத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ரன்யா ராவ், கர்நாடகாவின் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் சமீபத்தில் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து, அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ரன்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில், பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின், கஸ்டடியில் இருந்த நடிகை ரன்யா ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், கண்களுக்கு கீழே கருமையான திட்டுகளுடன், முகம் வீங்கியது போலவும், மன அழுத்தத்தில் அவர் இருப்பது போல இருந்தது.

இந்த நிலையில், டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு, நடிகை ரன்யா ராவ் கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
''நான் கைது செய்யப்பட்டது முதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, டி.ஆர்.ஐ., அதிகாரிகளால் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். என்னை, 10,15 முறை கன்னத்தில் அவர்கள் அறைந்தனர். அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பல முறை தாக்கப்பட்ட போதும், அவர்கள் தயாரித்த அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்து விட்டேன்.
மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டதால், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தயாரித்த, தட்டச்சு செய்யப்பட்ட 50 பக்கங்களிலும், 40 வெள்ளை காகிதங்களிலும் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை.

மார்ச் 03 மாலை 6:45 மணி - மார்ச் 4 இரவு 7:50 மணி வரை கஸ்டடியில் இருந்தபோது, எனக்கு வேண்டுமென்றே உணவு தரப்படவில்லை; துாங்கவும் அனுமதிக்கவில்லை.'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், சமூக வலைதளமான யு டியூப் பார்த்து, தங்கம் கடத்துவது எப்படி என தான் அறிந்து கொண்டதாக ரன்யா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமையை ரன்யா பெற்றுள்ளார். இதனால், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரன்யா ராவின் தந்தையும், டி.ஜி.பி.,யுமான ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ranya Rao complains that the investigation officers physically attacked her