Freedom Fighter : வரலாற்று நாயகன் வீர வாஞ்சிநாதன் பற்றிய சிறு தொகுப்பு.. உங்களுக்காக..!
Maveeran vanjinadhan history In tamil
மாவீரர் வாஞ்சிநாதன்:
நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர். சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றியவரை பற்றிய சிறிய தொகுப்பு.!
பிறப்பு :
வாஞ்சிநாதன் செங்கோட்டையில், 1886ஆம் ஆண்டு ரகுபதி ஐயர் மற்றும் ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி :
வாஞ்சிநாதன் செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை கல்லூரி படிப்பு முடிந்ததும், புனலூர் வனத்துறையில் பணியாற்றினார்.
திருமண வாழ்க்கை :
வாஞ்சிநாதன் பொன்னம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு :
வனத்துறையில் பணியாற்றி போது, ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை எட்டி இருந்தது. அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட புரட்சியாளர்களுக்கு, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் இருந்து உதவிகள் கிடைத்து வந்தன. அங்குள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வாஞ்சி, அரசுப் பணியில் இருந்து விலகி, புரட்சிப் பாதைக்கு மாறினார். நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்.
புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் வாஞ்சி தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்தித்துள்ளார். இந்தியர்கள் நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம்.
சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தப் பாடுபட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.
1911ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிட அறை நோக்கி ஓடினார். அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார்.
English Summary
Maveeran vanjinadhan history In tamil