பெட்ரோல் பாம் இல்லை, மின்கசிவு தான் காரணம் - டிஜிபி விளக்கம்!
ADGP Complaint Case issue DGP Statement
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNUSRB) கூடுதல் காவல் துறை இயக்குநர் கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல் மற்றும் மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர். ஆய்வில் பெட்ரோல், டீசல் போன்ற எரியும் பொருட்கள் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. மின் ஒயரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணம்" என்று டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஜி.பி. வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "கல்பனா நாயக், தனது அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது.
உடனே விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திருவல்லிக்கேணி துணை ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம், தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 31 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடயவியல், தீயணைப்பு மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
தற்போது நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தடயவியல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் போன்ற எரியக்கூடிய பொருட்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தீ விபத்தில் நாசவேலை எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADGP Complaint Case issue DGP Statement