அடுத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் தான் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
Dr Anbumani Ramadoss Say About Ariyalur Water management
"ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி" என்ற முழுக்கத்துடன், பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அரியலூர், கடலூர் மாவட்டத்தில் இருநாள் பிரச்சார எழுச்சி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அரியலூர் - கீழப்பழுவூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "அந்த காலத்தில் சோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு பாசன திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்த திட்டத்தை கையில் எடுத்து, வரவரை செய்தார்கள். ஆனால் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது உள்ள இந்த அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆழமான கோரிக்கை. அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கொள்ளிடத்தில் தென்பகுதி மிகச் செழுமையான பகுதியாக இன்றும் இருக்கிறது. வடக்கு பகுதி வறட்சியான பகுதியாக இருக்கிறது. 18 டிஎம்சி நீர் அரியலூர் மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது உள்ள ஏரிகள் தூர்வராமல் உள்ளதால் 8 டிஎம்சி அளவு மட்டுமே நீர் தேக்கி வைக்க முடிகிறது.
செம்பிய மாதேவி ஏரி, கரைவெட்டி ஏரி, பொன்னேரி போன்ற ஏரிகள் எல்லாம் இந்த மாவட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதில் நீர் கிடையாது. தூர்ந்து போய் கிடைக்கின்றன. இதனை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு மொத்த செலவு 2700 கோடி ரூபாய் ஆகும்.
இப்போது நான் மேற்கொண்டுள்ள நடைப்பயணம் என்பது முதல் கட்டம் தான். இதற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும்.
தர்மபுரி-காவேரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மூன்று நாள் நடைப்பயணம் மேற்கொண்டேன். அது குறித்த ஆய்வுகள் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருங்காலத்தில் காலநிலை மாற்ற பிரச்சனை உள்ளது. அதற்கு ஏற்ப நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நிதி நிதி நெருக்கடி இருந்தாலும், நீர் மேலாண்மைக்கு தான் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 110 கிலோமீட்டர் நீளம் உள்ளது கொள்ளிடம் ஆறு. இதில் ஒவ்வொரு 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் தடுப்பணை கட்டி இருக்க வேண்டும். இப்போதுதான் இரண்டு தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது போதுமானது கிடையாது.
மேட்டூர் அணைக்கு கீழ் நீர் தேக்கி வைக்கின்ற எந்த நீர் ஆதாரங்களும், இந்த 55 ஆண்டுகால திராவிட ஆட்சியில் நடக்கவில்லை. மேட்டூர் அணைக்கு கீழ் நீர் செல்லுமானால் அது நேரடியாக கடலுக்கு தான் சொல்கிறது. விவசாயத்திற்கு கொஞ்சம் சென்றாலும், மீதி கடலுக்கு தான் செல்கிறது.

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்னும் அதிகமான நீர் கடலுக்கு செல்ல இருக்கிறது. இந்த நீரை பாதுகாக்கவும், தேக்கி பயன்படுத்தவும், நீர் ஆதாரங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் ஆங்காங்கே 70 தடுப்பணைகளை கட்ட வேண்டும். அதன்மூலம் 70 டிஎம்சி நீரை நாம் மிச்சப்படுத்தி இருக்கலாம். நிலத்தடி நீரும் உயர்ந்திருக்கும். குடிநீருக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.
இதுபோன்ற சோழர்கால பாசன திட்டங்களை மீட்டெடுக்க வேண்டும். புதிதாக எதையும் உருவாக்க சொல்லவில்லை. இருப்பவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நான் மேற்கொண்டு உள்ளேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Ariyalur Water management