அதிமுகவிற்கு தோல்வி பயம் - விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின்..!!
TN Minister Udhayanidhi Stalin Speaks About ADMK Boycott Vikravandi Byelection
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு உதயநிதி ஸ்டாலின் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணித்திருப்பது குறித்தும், மேலும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களை வெற்றி பெற வைத்த மக்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.
அதேபோல் இப்போது விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக அரசு பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதில் முதன்மையானதாக விடியல் பயணத் திட்டம் உள்ளது. இதன் மூலம் மாதம் தோறும் பெண்கள் ஒரு கணிசமான தொகையை சேமித்து வருகின்றனர். மேலும் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சுமார் 1.16 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கப் படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தில் சுமார் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். காலை உணவுத் திட்டத்தின் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். அப்படியிருக்கையில், பிரதான எதிர்க் கட்சியான அதிமுக தோல்வி பயத்தால் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுகவை பார்த்து பயம். பாஜகவை பாத்து பயம். ஏன் மக்களைப் பார்த்தே பயம். அதனால் அவர் இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளார் " என்று பேசியுள்ளார்.
English Summary
TN Minister Udhayanidhi Stalin Speaks About ADMK Boycott Vikravandi Byelection