டெல்லியின் புதிய முதலமைச்சருக்கு கடும் போட்டி; ஆலோசனையில் பாரதிய ஜனதா கட்சி..!
Who will be new Delhi chief minister
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபையில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைக்கவுள்ளது. ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி வெறும் 22 இடங்களை மட்டுமே பிடித்து தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
டெல்லியின், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 02 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இந்நிலையில், டெல்லியின் முதல்வராக இருந்த அதிஷி மர்லேனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளதால் டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, மன் ஜிந்தர் சிங் சிர்சா, துஷ்யந்த் கவுதம், ஹரிஷ் குரானா ஆகிய 5 பேர் முன்னிலையில் உள்ளனர்.
முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இன்று பாஜக உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே பிரதமர் மோடி நாளை பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 12-ம் தேதி அமெரிக்கா சென்று, அங்கு அவர் டிரம்பை சந்தித்து பேசவுள்ளார்.
பிரதமர் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகே டெல்லியில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் பாஜக உரிமை கோர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் 15-ஆம் தேதிக்கு பிறகே புதிய முதலமைச்சர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Who will be new Delhi chief minister