முளைப்பாரி வழிபாடு என்றால் என்ன.? அதன் நன்மைகள் யாவை.? முளைப்பாரி வழிபாடு என்றால் என்ன.? - Seithipunal
Seithipunal


கிராம தேவதைகளுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு.

தென் தமிழகத்தில் பிரபலமான அம்மன் கொடை விழாக்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் பெண்கள் சேர்ந்து ஓரிடத்தில் தங்கி விரதமிருந்து முளைப்பாரியை வளர்த்து வழிபடுகின்றனர். பெண்களே இச்சடங்கினை நிகழ்த்துவதால் இது ஒருவகை வளமைக் குறியீட்டுச் சடங்காக அமைகிறது.

முளைப்பாரிகளை கொண்டு முளைப்பாரி திருவிழாவாகவும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது பெண்கள் முளைப்பாரி சட்டிகளை தூக்கி சுற்றும் நிகழ்வாகவும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

வளர்பிறை நாட்களில் விதைகளை தூவி, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள். பின்னர் 10ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள்.

அதாவது மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் விவசாயிகள் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து சாகுபடியை மேற்கொள்வார்கள்.

முளைப்பாரி வளர்க்கும் முறைகள்:

வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும். அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்பிலை தோரணம் கட்டி ஊருக்கு, 'இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்" என்று அறிவிப்பார்கள்.

விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்து வைப்பார்கள். பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள்.

அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுகளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

பிறகு விழாநாள் அன்று ஓர் இடத்தில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை எடுத்து ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள்.

தாரை தப்பட்டை, மேள வாத்தியம், வானவேடிக்கை முழங்க ஊர்மக்கள் சுமந்து கொண்டு ஊரைச் சுற்றி வந்து ஆலயத்தில் செலுத்துவர். அனைவரும் கூடி பொங்கல் வைத்தும் வழிபடுவர். கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் ஆகியன செய்து வைத்து வழிபடுவர்.

முளைப்பாரி வளர்க்கும் பெண்களின் விரதமுறையும், பக்தி நெறியும் கடுமையானது. இவர்கள் முளைப்பாரி வளர்க்கும் காலத்தில் கடுமையான விரதத்தை கடைபிடிப்பர்.

நன்கு குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிதல் வேண்டும். வெந்நீரை குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்தக்கூடாது.

இரவு பாலும் பழமும் மட்டுமே உண்ண வேண்டும். இறை பக்தி உணர்வூட்டும் பாடல்கள், கதைகளை மட்டுமே கேட்க வேண்டும். தொடர்பில்லாத பிறவற்றைப் பாடவோ, கேட்கவோ கூடாது போன்ற விரதமுறைகளை கடைபிடிக்கின்றனர்.

முளைப்பாரி போடுவதால் ஏற்படும் நன்மைகள்:

முளைப்பாரி சடங்கு செய்வதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.

முளைப்பாரிகளை ஓடும் ஆறு, குளம், வாய்க்கால்களில் போடுவார்கள். இதனுடன் இருக்கும் மண், உரம், முளை முதலியன நீர்பாயும் இடங்களில் எல்லாம் பரவி அந்நிலத்தைச் செழிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is mean mulaipari and how to pray


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->