ஐயப்பன் ஸ்பெஷல்... தர்ம சாஸ்தா என அழைப்பது ஏன்? தெரிந்து கொள்வோம்...!!
Why Iyappan called as dharma sastha
ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைப்பது ஏன்?
புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருட்கடல் தான் ஐயப்பன். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவனும் ஐயப்பன் தான். மற்ற கடவுளுக்கு மாலை போடும் பக்தர்களை விட ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தலைப்பில் ஐயப்பனுக்கு தர்மசாஸ்தா என்ற பெயர் இருக்கிறது அதற்கு பொருள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர் மேலும், தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப்பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்கு கட்டளை இட்டவர். வீரபத்ரரை தக்ஷ சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார்.
ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அழைக்கப்பட காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மம் சர என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.
ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்றும், இந்த தர்மத்தால் தான் இன்று அகிலம் தழைத்து நிற்கிறது என்றும் கூறுவார்.
ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
வரம் வாமஹஸ்தம் சஜாநூபரிஸ்தம்
வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
பஜே சம்பு விஷன்வோஸ் ஸஷுதம் பூதனாதம்.
வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே!
மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே!
பூதங்களின் நாதனாக திகழ்பவனே!
ஹரிஹரபுத்திரனே! ஐயப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!
சுவாமியே சரணம் ஐயப்பா...!!
English Summary
Why Iyappan called as dharma sastha