தமிழ்நாட்டில் தங்கியிருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; மீதமுள்ளவர்கள் வெளியேறுவதற்கு நாளை வரை அவகாசம்..!
200 Pakistanis staying in Tamil Nadu deported The rest have until tomorrow to leave
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று மாநில முதலமைச்சருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதையடுத்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்துள்ளனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 02 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனை உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியை குடியுரிமை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எத்தனை பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற உறுதியான தகவல்கள் கசிய விடக்கூடாது என்று உளவுப்பிரிவு போலீசாருக்கு மத்திய அரசு தரப்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
200 Pakistanis staying in Tamil Nadu deported The rest have until tomorrow to leave