திருச்செந்தூர் கடலில் 2-வது நாளாக ஐஐடி குழுவினர் ஆய்வு.!
chennai iit inspection in thiruchenthur sea second day
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளிநாடுகள், மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வருகைத் தருகின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் கடலில் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது எம்.பி கனிமொழி சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் கடற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டி.ஜி.பி.எஸ். என்ற நவீன கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம் என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது, கடல் மணல்சரிவு எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து இன்று வல்லுநர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வானது சென்னை இந்திய தொழிற் நுட்ப வல்லுநர்களால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
chennai iit inspection in thiruchenthur sea second day