எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை முத்தமிழ்செல்வி - ரூ.15 லட்சம் நிதி வழங்கிய உதயநிதி!
Chennai woman muthamizh selvi Everest
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்யச் செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்தமிழ்செல்விக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் கூடுதல் நிதியுதவியாக ரூபாய். 15 இலட்சம் வழங்கி உள்ளார் அமைச்சர் உதயநிதி.
சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி, 2023-ஆம் ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்" மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து, உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் செல்கிறார்.
நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கிய முத்தமிழ்ச் செல்வி, 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவினையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.
பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமாச்சல் பிரதேசம்,குலுமணாலி மலையில் தனது இருபிள்ளைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக்கொண்டும், மற்றொரு சிறுமியுடன் 165அடிஉயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு 55நிமிடங்களில் கீழே இறங்கி நடந்து வந்தார்.
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து 1389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். மேலும், இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி,காங் யெட்சே பீக் -2 (KANG YATSE HILL) மலையில் 5500மீட்டர் வரை ஏறி சாதனை படைத்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/dfshwrtjhwt.jpg)
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். மேலும், கூடுதல் நிதியுதவியாக தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூபாய் 15 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai woman muthamizh selvi Everest