எடப்பாடி பழனிச்சாமி போட்ட டிவிட்! திமுக அமைச்சர் கொடுத்த பதிலடி!
DMK Minister Reply to ADMK EPS for kalingar park
சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப் லைன் பழுது மற்றும் கட்டணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு, திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதில் கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்து இருந்த செய்திக்குறிப்பில், "விடியா திமுக முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதில் கொடுத்துள்ளார். அதில், சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் பூங்காவில் ஜிப் லைன் பழுதடையவில்லை.
ஜிப் லைன் என்பது பூங்காவில் புவியீர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் பழுதடைவதற்கு ஒன்றும் இல்லை. ஜிப் லைனில் இறங்கும் தளத்திலேயே இறங்க இயலும்.
உடல் எடையில் வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி ஜிப் லைன் தேங்கியது. பூங்காவில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் தரமானவை. பூங்காவிற்கு வருகின்ற அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு வேண்டப்பட்ட நபரிடம் இருந்து நிலத்தை மீட்டு, பூங்காவாக மாற்றியதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. ஜிப் லைன், பறவையகம் என அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணமே பூங்காவில் வசூலிக்கப்பட்டு வருகிறது" என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Minister Reply to ADMK EPS for kalingar park