இரட்டை கொலை வழக்கு.. வாலிபருக்கு ஆயுள் தண்டனை..திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Double murder case Juvenile sentenced to life imprisonment Tiruvallur Mahila Fast Track Court verdict
இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதம் : திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலணி, எச்விஎஃப் சாலையில் வசித்து வந்தவர் ரோஜா (25). அவருடன் குழந்தை சுஜாதா(3) மற்றும் அவருடைய கணவர் அருண்பாண்டியன்(29) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த 2019 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வீட்டில் ரோஜா மற்றும் அவருடைய குழந்தை சுஜாதா ஆகியோர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து உள்ளனர்.
ரோஜாவின் வீட்டின் அருகில் தங்கி இருக்கும் மற்றொரு நரிக்குறவர் குமார் என்பவரின் வீட்டிற்கு வந்த குமாரின் உறவினரான வீரா (எ) வீரகுமார் (25) என்பவர் ரோஜாவும் அவருடைய மகள் சுஜாதாவும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு ரோஜாவின் வீட்டிற்கு கடந்த 2019 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சென்று ரோஜாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதற்கு ரோஜா ஒத்துழைக்காததால் ரோஜாவையும் அவரது மகள் குழந்தை சுஜாதா இருவரையும் அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த இரட்டை கொலை சம்பந்தமாக ரோஜாவின் அண்ணன் சிரஞ்சீவி (27) என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் ஆவடி போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து வீரா என்ற வீரகுமாரை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்து போன ரோஜாவும், வீரா(எ) வீரகுமாரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் வீரா (எ)வீரகுமார் என்பவர் ரோஜாவிடம் தவறுதலாக நடக்க முயற்சி செய்த போது ரோஜா ஒத்துழைக்கததால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சாட்சிகளை விசாரணை செய்து வாக்குமூலங்கள் பதிவு செய்து இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.அமுதா வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிந்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ரேவதி கொலை செய்த குற்றத்திற்காக வேலூர் மாவட்டம் தாராபடவேடு கிராமத்தைச் சேர்ந்த வீரா (எ) வீரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இறந்து போனவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கியதால் 10 வருட கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ஆக மொத்தம் ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடும் காவல் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்புக்கு பின் தண்டணை பெற்ற குற்றவாளி வீரா(எ) வீரகுமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Double murder case Juvenile sentenced to life imprisonment Tiruvallur Mahila Fast Track Court verdict