சென்னையில் அரியவகை "ஜிபிஎஸ்" நோயால் சிறுவன் பலி! நோய் அறிகுறி என்ன?
GBS chennai boy death
திருவள்ளூரை சேர்ந்த வைத்திஸ்வரன் என்ற 9 வயது சிறுவன் "ஜிபிஎஸ்" எனப்படும் அரிய வகை நோயால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேம்குமார் என்பவரின் மகன் வைத்திஸ்வரன் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பில் படித்து வந்த நிலையில், சிறுவனின் கால்களில் திடீர் உணர்விழப்பு ஏற்பட, அவனை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பரிசோதனையில், சிறுவன் "ஜிபிஎஸ்" எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாக்டீரியாக்களால் பரவக்கூடிய இந்த "ஜிபிஎஸ்" எனப்படும் அரிய வகை நோயால் ஏற்கனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 10 க்கு மேற்பட்டோர் கடந்த ஒரு மாதத்தில் பலியாகியுள்ளனர்.
இந்த நோய் குறித்து மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, ஜிபிஎஸ் நோய் தொற்று இந்தியாவிற்கு புதியது இல்லை. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம் என்கின்றனர்.
நோய் வர காரணம்: தரமற்ற உணவு, நீர் மாசுபாடு, நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை பாதிப்பு, மருந்து எதிர்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை என பல காரணங்களால் இந்நோய் வருகிறது.
முதல்கட்ட நோய் அறிகுறி: வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல்.
இரண்டாம் கட்ட நோய் அறிகுறி: நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூட்டு வலி, முதுகு வலி, கைகால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணர்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.