பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது,உடனடி நடவடிக்கை தேவை ..அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Immediate action is needed on the petitions given by the public Nilgiris District Collector orders officials
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனநீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டிற்க்கு, 100 சதவீதம் கொடிநாள் வசூல் செய்ததற்கு தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திருமதி ஷிபிலா மேரி அவர்களுக்கு 30 கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தால் பதிவுப்பெற்ற 4 உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணந்த குடிமைப்பணிகள் (தேர்வு IV) மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 நபர்களுக்கு பேரூராட்சி துறைகளில் "வரித்தண்டலர்" (BILL COLLECTOR) பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிசாமி (நிலம்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்கண்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முகமது ரிஸ்வான், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் (பொ) இந்திராகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Immediate action is needed on the petitions given by the public Nilgiris District Collector orders officials