திருச்செந்தூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா; வள்ளி திருக்கல்யாணத்திற்காக குவிந்து வரும் பக்தர்கள்..!
Panguni Uthiram festival at the Thiruchendur Murugan Temple
பங்குனி உத்தர திருவிழா 2025
இந்துக்கள் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று தங்கள் குல தெய்வ கோயில்களிலும், குல தெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
இதையடுத்து குலதெய்வ வழிபாடு செய்வதற்காகவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் செல்ல தொடங்கியுள்ளனர். அத்துடன் முருகனின் தீவிர பக்தர்கள் இந்த பங்குனி உத்தர நாளில் திருச்செந்தூர் முருகனை வழிபடவும் செல்வர்.இதனால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (11-ஆம் தேதி) கொண்டாடப்படவுள்ளது. இந்த பங்குனி உத்தரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இரவு முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
இதனால், திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (11-ஆம் தேதி) அதிகாலை 04 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் 04.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 05 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். காலை 06 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளி புறப்படுவார். மாலை 03 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நநடைபெறவுள்ளது.

அத்துடன், மாலை 04.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித்தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை தரவுள்ளார். பின்னர் சுவாமியும், அம்மனும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து, அங்கு சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன் பின்னர் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து திருக்கோயிலில் சேர்வார்கள். மேலும், இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்சாரம், பந்தல் வசதி அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Panguni Uthiram festival at the Thiruchendur Murugan Temple