வரம் வாங்கி வந்த பூமி... பிச்சாவரம்...!!
pichavaram
நீண்ட நீர்வழிப்பாதை, எழில் கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரியாகக் காட்சி தருகிறது பிச்சாவரம்.
சிதம்பரத்தில் இருந்து 13கி.மீ. பயணித்தால் போதும்... கிள்ளை எனும் கிராமம் வருகிறது. இந்தக் கிள்ளை கிராமத்தையொட்டிதான், வரம் வாங்கி வந்த பூமியாகத் திகழ்கிறது பிச்சாவரம்.

சுள்ளென்று அடிக்கிற கோடை வெயிலுக்கு, இங்கே ஒருநாள் போய் வருவது, உடலுக்கும் குளிர்ச்சி... மனதிற்கும் மலர்ச்சி...
சிறப்புகள் :
பிச்சாவரத்தில் எங்கு திரும்பினாலும் மரங்கள்... மரங்கள்... மரங்கள்... கண்ணுக்குக் குளிர்ச்சியை இந்த மரங்கள் வழங்கும் போதே, சில்லென்ற காற்று, நீரில் பட்டு, காற்றில் கலந்து நம் உடலுக்கு இதம் தரும் போது, அடடா!! சொர்க்கம்... சொர்க்கம்... என்று சிலாகித்து மெய்மறக்காதவர்களே இருக்க முடியாது.

இந்தியாவிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்து சுந்தரவனக் காடுகள் சுற்றுலா தலமாக இருப்பது இங்குதான் என்கிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன.

உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு என்று கொண்டாடுகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். புன்னை வகையில் ஒன்றான சுரபுன்னை மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கின்றன.

குளம் போலவும்... ஏரி போலவும்... ஆறு போலவும்... அழகு காட்டி, குளுமை கூட்டி இருக்கும் இந்தச் சூழலை, இன்னும் ரம்மியமாக்க... வியப்பூட்ட... மகிழ்வூட்ட... படகுச் சவாரியும் உண்டு.
நகர வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கும் நகர வாசிகளுக்கு இது ஒரு நல்ல இடமாக அமையும்.