அமலாக்கத்துறை சோதனை - டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம்.!
tasmac employees association condemns enforcement department raid
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு தனியார் மது தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மதுபானம் கொள்முதல் செய்தபோது சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள மதுபான தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:- "மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
அதாவது தலைநகர் டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை, வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது. சத்தீஸ்கர், டெல்லி முதலமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்டனர்.
தமிழக அரசு தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து வரும் நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை எல்லையைத் தாண்டி உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்திற்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
English Summary
tasmac employees association condemns enforcement department raid