லாரி டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
The truck overturned in the roadside ditch
லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பா கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்பொழுது தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே லாரி வந்தபோது திடீரென லாரியின் முன்புற டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் பின்புறம் கடப்பா கல் மீது அமர்ந்து வந்த சிவாரெட்டி மற்றும் வரதராஜீ ஆகிய இருவரும் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது லாரியில் இருந்த கடப்பா கற்கள் விழுந்ததில் இரண்டு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் லாரி ஓட்டுநர் லட்சுமணய்யா மற்றும் அவருடன் அமர்ந்து வந்த அவரது மகன் வாசு மற்றும் சுப்பு நாயுடு ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The truck overturned in the roadside ditch