ஆறாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி.!
viranam aeri filled at sixth time
தமிழகத்தில் உள்ள முக்கியமான நீராதாரங்களில் ஒன்று வீராணம் ஏரி. இது காவிரியின் கடைமடை பகுதியான காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது.
சுமார் 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரி டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருப்பதுடன், சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. பொதுவாக இந்த ஏரிக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டு, கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, தஞ்சை மாவட்டம் கீழணை மூலம் வடவாறு வழியாக வருகிறது.
தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக 14.95 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்கள் வழியாக மழைநீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளவான 47.50 அடியை நிரப்பாமல் ஏரியின் பாதுகாப்பு கருதி 46.50 அடி நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வீராணம் ஏரி இந்த ஆண்டு 6-வது முறையாக நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டு இருந்தால் வெள்ளியங்கால் ஓடை, வி.என்.எஸ். மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். மேலும், வீராணம் ஏரியினை சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருகின்றனர்.
English Summary
viranam aeri filled at sixth time