பிரிட்டிஷாரை விட பாஜகவினர் மோசமானவர்கள்; கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்..!
BJP is worse than the British Kejriwal strongly criticized
பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை என்றும், பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால், ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்ப நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன். ஆனால், அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும் விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது என்றும், பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால், என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள் என்று கடுமையாக விமரிசித்து பேசினார்.
அத்துடன் அவர் மேலும் கூறுகையில், 'எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.'' எனவும் தெரிவித்தார்.

மேலும், பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன எனவும், பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன் என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இவ்வாறு நடப்பதை பார்த்து தான் மிகவும் வருத்தப்பட்ததற்காகவும், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் தெரிவித்தார். இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
English Summary
BJP is worse than the British Kejriwal strongly criticized