சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினம்..காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை!
Sindhanai Sculptor Singaravelars Birthday Congress garlands!
புதுச்சேரியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை ஒட்டி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்திகுப்பத்தில் பிறந்தார்.இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் இவருக்குப் புலமை இருந்தது.வெலிங்டன் சீமாட்டிக் கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள் பற்றியே இவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பது பலருக்கும் தெரியாது.இவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை இவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் .
சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927 இல் பெங்கால்-நாக்பூர் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927 இல் சாக்கோவுக்கும் வான்செட்டிக்கும் தீர்ப்பாகிய மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928 இல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்தியத் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930 இல் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரண மடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை ஒட்டி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீனவ அமைப்பு நிர்வாகிகள் மீனவர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
English Summary
Sindhanai Sculptor Singaravelars Birthday Congress garlands!