கருணாநிதி பேனா நினைவு சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Supreme Court verdict Karunanidhi pen memorial case
ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சூசை அந்தோணி மற்றும் சென்னையைச் சேர்ந்த தங்கம் ஆகியோர் சார்பில் வங்கக்கடல் நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அமைக்கும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
பொதுநல வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதில் கடலில் நினைவுச் சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் நலன் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு வழங்கிய அனுமதி மற்றும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
![](https://img.seithipunal.com/media/pen statue-u9x86.png)
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. பொதுநலன் சார்ந்த விவகாரம் என கூறி இயற்கை சூழல் சார்ந்த விவகாரம் தொடர்பாக ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, இது சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரம் என்றால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும்.
ஏன் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதனால் மனுதாரர்கள் தங்கள் மனுவை திரும்பபெற்றுக் கொள்வதாக தெரிவித்ததால் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
![](https://img.seithipunal.com/media/Delhi Supreme Court.jpg)
ஏற்கனவே கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் தற்பொழுது மீதமிருந்த மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே போன்று மத்திய அரசும், மாநில அரசும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் வங்க கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தற்போது எந்த தடையும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அல்லது பசுமை தீர்ப்பாயத்தை நாடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Supreme Court verdict Karunanidhi pen memorial case