ராகுலின் மேல் முறையீட்டு வழக்கு.. "தண்டனை குறைக்கப்படுமா..?" சூரத் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..!!
Surat court to deliver judgment in Rahul Gandhi appeal case today
கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மோடி எனும் சமூகத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு தொடர்பாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்கள் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு முன்பு பாஜக எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி ராகுல் காந்தியின் சிறை தண்டனையை ரத்து செய்யக்கூடாது என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் தண்டனை உறுதி செய்யப்படுமா? அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று தீர்ப்பு வரவுள்ளது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Surat court to deliver judgment in Rahul Gandhi appeal case today