அடுத்த கொடூரம்: தமிழகப் பெண்களுக்கு எப்போது விடியல் வரும்? கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin Woman safety in TN
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 10-வது படிக்கும் அரசுப்பள்ளி மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட சிலர், கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அம்மாணவி கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா? அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? என்பது தெளிவாகத் தெரியாத பட்சத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சமீபகாலமாக தமிழகத்தில் பதின்ம வயது சிறார்களிடையே போதைப்பொருள் பழக்கம், ஆளைக் கொல்லும் பயங்கர ஆயுதங்களின் புழக்கம், சாதிய ரீதியிலான மோதல் போன்றவை பெருகியுள்ளது என்பதைத் தொடர்ந்து நாம் குறிப்பிட்டு வரும் வேளையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற பெண்களுக்கெதிரான கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபடுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேராபத்தாக முடியும் என்பதை முதல்வர் ஸ்டாலின் எப்போது உணர்வார்?
குற்றங்களை ஒடுக்கவேண்டிய முதல்வரின் இரும்புக்கரம் வெறும் விளம்பர உடைமையாக மட்டும்தான் பயன்படுத்தப்படுமா? சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை நெறிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமையல்லவா?
எனவே, இக்கொடூர சம்பவத்தின் உண்மைப் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் விதிப்பதோடு, பள்ளி மாணவர்களிடையே படர்ந்து வரும் இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரத்தைக் களைய தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் தமிழக முதல்வரை வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin Woman safety in TN