அவதூறு வழக்கு விசாரணை; இன்று நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு; நீதிபதி எச்சரிக்கை..!
If Seeman does not appear in court today he will be arrested Judge warns
திருச்சி மாவட்ட டி.ஐ.ஜி. வருண் குமார் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமூக ஊடக தளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக 07-ந் தேதி (நேற்று) சீமான் நீதிமன்றில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், சீமான் அதற்கான நோட்டீசை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், நேற்று காலை (07-ந் தேதி) அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. வருண்குமார் நேற்று நீதிமன்றில் ஆஜரானார். இதையடுத்து மாலை 05 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனாலும், சீமான் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராங்க முடியவில்லை என்றும், சீமான் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், இல்லையெனில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
English Summary
If Seeman does not appear in court today he will be arrested Judge warns