சீட்டிங் செய்து சிக்கியதால், மருமகனை ஒதுக்கி வைத்த கலைஞர் குடும்பம்! நாளிதழில் அறிவிப்பு!
karunanidhi's daughter mk selvi publish the news about their son in law
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில், நுாதன மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மகள், செல்வியின் மருமகன் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இருவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மருமகனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என செல்வியும் அவரது கணவர் செல்வமும் கூட்டாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ். வேலுார் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த ஜாகீர் அகமத் தமான் தினேஷுடன் நெருங்கி பழக்கமாகியுள்ளார். ஜாகீர் அகமத் தமான் தினேஷிடம், எனக்கு தெரிந்த தொழில் அதிபர் 100 ரூபாய் நோட்டுகளாக 1 கோடி ரூபாய் வைத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகளை 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். அவ்வாறு மாற்றி கொடுத்தல் 80 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும், அவர் 1 கோடி ரூபாயாக தந்து விடுவார்" என கூறியுள்ளார்.
ஜாகீர் அகமத் தமான் அழைத்தபடி, 80 லட்சம் பணத்துடன் காரில் நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிற்கு தினேஷ் சென்றுள்ளார். அங்கு ஜாகீர் அகமத் தமான் உள்ளிட்ட நான்கு பேர் இருந்தனர். 80 லட்சம் ரூபாய் பேக்கை பெற்று கொண்ட அந்த நான்கு பேரும் 1 கோடி ரூபாய் இருப்பதாக 2 பெரிய பைகளை கொடுத்துள்ளனர். அதில் துணிகள் மட்டும் இருந்த நிலையில் தினேஷை ஏமாற்றிய அந்த நான்கு பேரும் தப்பி சென்றார்கள்.
இதனையடுத்து ஏமாந்ததை அறிந்த தினேஷ் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது முன்னாள் முதல்வரான மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி என்பது தெரிய வந்தது.
செல்வியின் மகள் டாக்டர் எழிலரசியின் கணவர் தான் இந்த ஜோதிமணி. ஜோதிமணி மற்றும் ஜாகீர் அகமத் தமானை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின் இந்த நூதனமான மோசடி விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். மோசடி செய்த ஜோதிமணி 80 லட்சம் ரூபாயையும் தினேஷிடம் திரும்ப ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜோதிமணி உள்ளிட்டோரை விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ஜோதிமணிக்கும், அவருடைய செய்லபாடுகளுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கருணாநிதியின் மகளும் மருமகனும் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
English Summary
karunanidhi's daughter mk selvi publish the news about their son in law