டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு தடைவிதிக்க பாஜக வலியுறுத்தல்..!
Kejriwal alleges that Yamuna river water is poisoned BJP demands a ban on campaigning
ஹரியானா மாநிலத்தில் இருந்து யமுனைக்கு வரும் நதி நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யமுனை நீரில் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதாக ஹரியானா மாநில அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். "மக்களின் குடிநீரை தடுப்பதைவிட பெரிய பாவம் ஏதும் கிடையாது. பாஜக தனது மோசமான அரசியலுக்காக டெல்லி மக்களை தாகத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறது.
ஹரியானாவிலிருந்து அனுப்பப்படும் தண்ணீரில் விஷத்தைக் கலக்கிறார்கள். இந்த மாசுபட்ட நீர் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, அதை டெல்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் சுத்திகரிக்க முடியாது. பாஜக டெல்லி மக்களை பெருமளவில் கொல்ல விரும்புகிறது. இது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஹரியானா அரசு மீது மோசமான குற்றச்சாட்டை கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
குறித்த, புகாரில் கெஜ்ரிவால் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும், மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில் "போரின்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கூட இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியதில்லை. கெஜ்ரிவால் அவரது தோல்வியை மறைக்கவும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி தோல்விய அடைய இருப்பதை உணர்ந்தும், இது போன்ற தரம் தாழ்ந்த அரசியல் கருத்தை தெரிவித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் "நாட்டிற்குள் இருக்கும் ஒரு முன்னாள் முதல்வர், மற்றொரு முதல்வர் மீது இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஒரு குற்றச்சாட்டை எப்படி கூற முடியும்?. கெஜ்ரிவால் கூறியது நியாயமற்றது, பொறுப்பற்றது மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். இது தேர்தல் அரசியலக்கும் இந்திய கூட்டாட்சி அமைக்கும் ஆபத்தானது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kejriwal alleges that Yamuna river water is poisoned BJP demands a ban on campaigning