இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை! - பாஜக எல்.முருகன் பேட்டி!
No one tried to impose hindi bjp l murugan byte
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.
இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வை தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல் சித்தரிக்க தி.மு.க. முயல்கிறது என்றும், ஆனால் அது நிச்சயம் நடக்காது என்று தெரிவித்த அவர், இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை என்றும், எனவே மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
மேலும், தவறுகள் நடப்பது சகஜம்தான் என்றும், ஆனால் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது சிறிய தவறு நேர்ந்ததற்கு, அவர் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
English Summary
No one tried to impose hindi bjp l murugan byte