விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா; ''ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு.'' திருமாவளவன் பேச்சு..!
Our goal is to have a share in governance and power Thirumavalavans speech
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் விழுப்புரத்தில் நடந்தது. இதில் அக்கட்சின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
'கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு என்று தெரிவித்தார். அத்துடன், நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், வி.சி., பாதிப்பு என கூறி வந்தார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கும் போதும் அப்படி சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து வி.சி.,நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும் வி.சி., எதுவும் செய்ய முடியாது. சினிமா கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் திசை மாற்ற முடியாது.'' என குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்; ''25 ஆண்டு காலமாக, ஒரு பட்டாளத்தை வி.சி.,அதே வேகத்தில் வைத்துக்கொண்டுள்ளது. எந்த சரிவும் வீழ்ச்சியும் இல்லை. 25 ஆண்டுகள் கடந்து கட்சி தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.'' என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ' தி.மு.க., அ.தி.மு.க.,வோடு இணைந்துள்ளதால் தான் வெற்றி என சிலர் ஏளனம் பேசுகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகளும், தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளது.'' என அவர் தெரிவித்தார்.
''ஆண்ட கட்சிகளே வி.சி.,கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம். தற்போது ஒரு நடிகர், தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் அவர்தான் என பேசுகின்றனர்.''என குறிப்பிட்டார்.

திருமாவளவன் தொடர்ந்து பேசுகையில்;''நான் தொடக்கத்தில் ஏராளமான ஓட்டுகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர், நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிக்குள் தான் ஒதுக்குகின்றனர். கடந்த 2006-ஆம் ஆண்டு தான், நாம் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கைதான் பெரிது என்பதால் குறைந்த தொகுதியை வாங்குகிறோம்.'' என பேசினார்.
அத்துடன், ''தமிழக மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே நாங்கள் தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு.'' இவ்வாறு திருமாவளவன் மேலும் குறிப்பிட்டார்.
English Summary
Our goal is to have a share in governance and power Thirumavalavans speech