கருணாநிதி பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. ஜூலை 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.!!
Supreme Court hear Karunanidhi pen memorial case on July3
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம் நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்ற நிலையில் பெரும்பாலான மீனவர்கள் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனையும் மீறி கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, நாகர்கோவிலைச் சேர்ந்த வாகன் ஆகிய மீனவர்கள் சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/pen statue-u9x86.png)
இந்த மனு வரும் ஜூலை 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வில் ஜூலை 3ம் தேதி விசாரணை தொடங்க உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மக்களின் கருத்தை உரிய முறையில் கேட்காமல் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோன்று மீனவர்களின் கருத்தை பொறுப்பெடுத்தாமல் தமிழக அரசு முடிவு செய்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது என்பது இயற்கைக்கு முரணானது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் கடல் வளத்தை பாதிக்கும் வகையில் இந்த நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/Delhi Supreme Court.jpg)
கடலில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு முழுமையாக அனுமதி வழங்கியுள்ள நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜூலை 3ம் தேதி பேனா என்று நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் ஆஜராகி பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Supreme Court hear Karunanidhi pen memorial case on July3