எச்.ராஜாவின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது ஹைகோர்ட்..!
The High Court stayed H Raja's prison sentence
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

குறித்த புகார்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
குறித்த மனுவில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டதாகவும், தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது எனவும், சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், மேல் முறையீட்டு வழக்கு முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை மனுதாரருக்கு விதிக்கபட்ட தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், எச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
English Summary
The High Court stayed H Raja's prison sentence