''அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே நடைமுறைக்கு வரவில்லை'' கசப்பான உண்மை என்கிறார் திருமாவளவன்..!
Thirumavalavan says the bitter truth is that Ambedkar Constitution has not been implemented
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சமூக அமைப்புகள் மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், வி.சி.க, தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ''நமக்கு அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து, கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும், முற்றாக எதிர்த்துப் போராடுவதும் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. எதிர்ப்பு மனநிலையை வீரம் என்று எண்ணுவோர், அது ஒரு நல்ல வியூகம் அல்ல என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் நம்மிடம் நல்ல பதிலை வழங்குவர். ஆனால், ஒன்றும் நடக்காது. அத்தகைய அதிகாரிகளையும் செயல்பட வைக்க, அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும். தற்போது, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், நம்மால் கொடியேற்ற முடியவில்லை.'' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் பேசுகையில்; ''நாம் கொடியேற்றும் போதுதான் சட்டம் பேசுவர். இதன் வாயிலாக, இன்னும் அரசியல் வலிமை பெறுவதற்கான தேவையை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே, கசப்பான உண்மை. நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தியா சமத்துவம் பெற்றிருக்கும்.'' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ''சனாதன தர்மம் தான் நடைமுறையில் உள்ளது. அதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, 16 - 4ஏ சட்டப்பிரிவு முக்கியம். மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டு, பதவி உயர்வு வழங்க முடியும்.'' என்றும் பேசியுள்ளார்.
அத்துடன், ''இதுதொடர்பாக, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என்றும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம் என்றும் திருமா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சட்டம் வந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதற்காக, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் நாம் நுழைய வேண்டிய தேவை உள்ளது.'' என்றும் திருமாவளவன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Thirumavalavan says the bitter truth is that Ambedkar Constitution has not been implemented