ஒழுங்கா ரோடு போடுங்க, அப்புறம் அபராதம் விதிக்கலாம்! வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Traffic new fine announce chennai hc order
மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் விதித்து வருகின்றனர்.

மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதி வேகமாக, அபாயகரமாக வாகனத்தை செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 18 வயதிற்கு உட்பட்ட நபர் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், "அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், மனுதாரர் மீதான மனுவிற்கு தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
English Summary
Traffic new fine announce chennai hc order