விடியல் ஆட்சி.. ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடி.. மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள்.. கொந்தளிப்பில் டிடிவி தினகரன்.!!
TTV Dhinakaran tweet for Electricity
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 10 வருடங்களில் மின்சார துறையின் கடன் ரூபாய் 12647 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 42% மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மின்கட்டண உயர்வு என்ற அடுத்தப் பரிசை வழங்கியிருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாக சொன்னவர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களின் தலையில் இடியாகவே விழுந்து கொண்டிருக்கிறது.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இது தான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ?
ஏற்கனவே, நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையையும் மனசாட்சியோடு யோசித்துப் பார்த்து தி.மு.க அரசு மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்ன பதிவிட்டுள்ளார்.
English Summary
TTV Dhinakaran tweet for Electricity