ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த அதிரடி! சிக்கிய 3 முக்கிய புள்ளிகள்!
Bahujan Samaj Party Armstrong murder CBCID case update
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முகிலன், அப்பு, நூர் விஜய், ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஐந்தாம் தேதி பெரம்பூர் பகுதியில் வைத்து, எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
கொலை நடந்த அன்று இரவே எட்டு பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சரணடைந்த குற்றவாளிகளில் திருவேங்கடம் என்பவன் போலீசாரின் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தருவதில் தமிழக அரசு மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அஞ்சலை இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
மேலும் வழக்கில் தற்போது வரை ஆறு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய ரவுடிகள் சிலரும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
English Summary
Bahujan Samaj Party Armstrong murder CBCID case update