நாகையில் சுற்றுப்பயணம் - புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினத்தில், இன்று அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகை வந்தார். இதற்காக அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு நாகப்பட்டினம் சென்றடைந்தார்.

நாகை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தூர் ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை புத்தூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவருமான கவுதமன் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி திருமண விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி விட்டு நாகை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அதேபோல் பல்வேறு துறையின் கீழ் ரூ. 820 கோடி மதிப்பில் அரசு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து பால்பண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு மதிய உணவு அருந்துகிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் மூலம் திருச்சி சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

இந்த விழாக்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin visit nagapatinam district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->